ஈரானின் ஆதரவின்றி இலங்கையால் உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயாவுக்கு நீரை கொண்டு சென்றிருக்க முடியாது. அதற்காக ஈரான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஈரானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உலகின் தென்துருவ நாடுகள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதற்காக தென்துருவ நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“இன்று இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்ற ஈரான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் கருதுகிறேன்.
இந்தத் திட்டம் எனது பதவிக் காலத்திற்கு முன்பிருந்த தலைவர்களால் தொடங்கப்பட்டது என்பதைக் கூற வேண்டும். அத்துடன் உலர் வலய பிரதேசத்திற்கு நீர் வழங்கும் இத்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அக்கறை காட்டினார்.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் எமது இரு நாடுகளுக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நல்ல அனுபவம் உள்ளது.
எனவே, இந்த சவால்களையும் நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். மேலும் உமா ஓயா திட்டம் நமது இரு நாடுகளின் இரண்டு பழைமையான நீர்ப்பாசன மரபுகளின் கலவையாகும்.
ஈரானில் பெர்சியா மற்றும் இலங்கையில் அனுராதபுரத்தின் நீர்ப்பாசன பாரம்பரியம் இங்கே உள்ளது என்பதைக் கூற வேண்டும்.