ஈரானுக்கும் இலங்கைக்குமிடையே இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் நேற்று இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இலங்கையின் திரைப்படத் துறையின் மேம்பாட்டுக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலில் கைச்சாத்திடப்பட்டது.
ஊடக மற்றும் சுற்றுலாத் துறையில் அபிவிருத்திக்காக இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்காக இலங்கையின் தேசிய கூட்டுறவு சபைக்கும் ஈரான் கூட்டுறவு சும்மேளனத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அத்துடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தேசிய நூலகம் மற்றும் ஆவணக் காப்பகத்துக்கும் இலங்கை தேசிய நூலகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தும் வகையில் மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இறுதியாக கலாசார, அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வெகுஜன ஊடகம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்காக இலங்கை அரசாங்கத்துக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.