இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் (19) வௌ்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில்,ஆராயப்படவுள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25 இல், நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபை முன்னாள் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொதுவேட்பாளர் விடயத்தை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்த உறுதியான முடிவும் இக்கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.