பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்குடன் இன்று சம்பள நிர்ணய சபை கூடுவதுடன், முற்பகல் 10.00 மணிக்கு தேயிலை நிர்ணய சபையும் பிற்பகல் 2.00 மணிக்கு இறப்பர் நிர்ணய சபையும் கூடுகிறது.
இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. வாக்கெடுப்பில் முதலாளிமார் சம்மேளனம் சார்பில் 08 உறுப்பினர்களும் தொழிற்சங்கங்கள் சார்பில் 08 உறுப்பினர்களும் வாக்களிக்கவுள்ளனர். அதேநேரம் தொழில் அமைச்சு சார்பில் 03 உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வாக்கெடுப்பில் தொழிற்சங்கங்களை வெற்றி பெறுமென பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தொழில் அமைச்சின் வாக்குகள் தொழிற்சங்கங்கள் சார்பாகவே வழங்கப்படுமென தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே தொழிற்சங்கங்கள் 11 வாக்குகள் பெற்று கடந்த முறை 1,000 ரூபா பெற்று கொடுத்ததை போன்று இம்முறையும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்.
வழமை மாறாது சலுகைகளுடன் வேலை சுமையை அதிகரிக்காது சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். அத்துடன் மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் வர்த்தமானியிலும் அறிவிக்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சருக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.