பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் தேர்தல்கள் பிற்போடப்படுமென்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை, அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார். கோஷங்கள் இல்லாததால் அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதாக போலியான பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கின்றன.தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் பலம் ஜனாதிபதி தலைமையிலான அணிக்கு உள்ளது. அனைவருக்கும் சமமான சட்டத்தை அமுல்படுத்துவதே எமது நோக்கமாகும். நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வதில், மேலும் சில விசேட சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாடு வங்குரோத்தடைந்ததால்,பணத்தை அச்சிட முடியாது என ஜனாதிபதி அறிவித்தார். அரசியலமைப்பின்படி ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.