ஏ 09 வீதி ஓமந்தையில் டிப்பர் வாகனமொன்றும் கெப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டொக்டர் கு.அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளரும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளருமான டொக்டர் கு.அகிலேந்திரன் பயணித்த வாகனமே இந்த கோரவிபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளதை ஓமந்தைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து கடமை முடிந்து வவுனியா நோக்கி பயணித்த பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் வாகனம் ஓமந்தை, கள்ளிக்குளம் சந்தியை கடந்து பயணித்த போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது டிப்பர் வாகனத்துக்கு முன் அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியும் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
விபத்தில் வைத்தியர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன், வாகனத்தை செலுத்திய முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரான டொக்டர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தின் சாரதி ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
வவுனியா, ஓமந்தை நிருபர்கள்