ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024 மே மாதம் 08 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் நிலவுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
1981ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதனையடுத்து டயானா கமகே இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.
இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த டயானா கமகே, பிரிட்டன் பிரஜை என்றும் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு சட்டபூர்வமான தகுதியற்றவர் என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தெரிவித்தே அவருக்கு எதிரான மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)