இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக மீனவர்களில், மூன்று பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது டன், ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று தமிழக மீனவர்களுள் ஒருவர் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றத்துக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர். இதனாலேயே அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களினதும், 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது, 36 தமிழக மீனவர்களும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து, அவர்களில் இரண்டு படகோட்டிகளுக்கும் 06 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதேவேளை மற்றுமொரு கடற்தொழிலாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததால் மீண்டும், அத்துமீறி நுழைந்தமையாலேயே அவருக்கு 01 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ஏனைய 33 கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதனை 05 வருடங்களுக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
(யாழ்.விசேட நிருபர்)