நாட்டை மீட்க பாராளுமன்ற தேர்தலை விட ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்தது . நிலையான அரசாங்கத்தின் மூலமே நாட்டை மீட்டெடுக்க முடியுமென ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு பாராளுமன்றத் தேர்தலின் மூலம் நாட்டில் நிலையான ஆட்சி கிடைக்காதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள நிலைமையில் இருந்து மீள்வதற்கு நிலையான அரசாங்கம் ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதனை நியமிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய காலத்தில் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்திரப்படுத்தியதாக தெரிவித்த ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை எனவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (28) நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தார்.
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் பசில் ராஜபக்ஷ இருந்தால் நல்லதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாமல் ராஜபக்ஷவுக்கு அதிக கால அவகாசம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.