தேசிய சினிமாவின் மாபெரும் விழாவான சரசவிய சினிமா விருதுகள் வழங்கும் விழா நாளை (28) மாலை 6.00 மணி முதல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அறுபதாவது ஆண்டை பூர்த்தி செய்துள்ள சரசவிய திரைப்பட சஞ்சிகை 35ஆவது முறையாக இவ்விழாவை நடத்துகிறது. ‘லக்ஸ்’ அனுசரணை வழங்கும் இந்த விருது வழங்கும் விழாவுக்கு பிரதம அதிதியாக கலாநிதி மாலினி பொன்சேக்கா கலந்து கொள்ளவுள்ளார்.
கொமர்ஷல் வங்கி உத்தியோகபூர்வ வங்கி பங்களிப்பையும், சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசை உத்தியோகபூர்வ இலத்திரனியல் ஊடக பங்களிப்பையும் இதற்கு வழங்கவுள்ளன.
இந்த ஆண்டு 2019 மற்றும் 2020இல் வெளியான திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த 40 திரைப்படங்களுக்கு நடுவர்கள் தேர்வு செய்த விருதுகளுடன் 64 விருதுகள் வழங்கப்படவுள்ளன. 2019ஆம் ஆண்டு திரையிடப்பட்ட 30 படங்களில் 28 படங்களும், 2020ஆம் திரையிடப்பட்ட 12 படங்களும் போட்டி பிரிவில் அந்தந்த வருடங்களுக்கான 24 விருதுகளுக்கு தனித்தனியாக போட்டியிடும். அனைத்து விருதுகளும் சுயாதீன நடுவர் குழுவால் வழங்கப்படுகின்றன.