கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம் புரண்டதன் காரணமாக, கரையோரப் பாதையில் பயணிக்கும் புகையிரத சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில் பயணித்த கடுகதி புகையிரமொன்று கோட்டை மற்றும் கொம்பனித்தெரு புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் புகையிரத தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் புகையிரத திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபோலகே குறிப்பிட்டார்.
குறித்த புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக நேற்றிரவு காலி அஞ்சல் புகையிரதம் உள்ளிட்ட 4 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (20) காலை கொழும்பில் இருந்து செல்லும் புகையிரதங்கள் தாமதமாகலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு பகுதி புகையிரத பாதையை இன்று காலை 7.00 மணிக்குள் இயக்க முடியும் என பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபோலகே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.