பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர குருநாகல் மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
தற்போது தயாசிறி கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்னவும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோப் அறிக்கைகள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஊழல் நடவடிக்கைகள் அல்லது தவறான நிர்வாகத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நம்பகமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விக்கிரமரத்ன தனது இராஜினாமா கடிதத்தில் விளக்கினார்.
கடந்த அரசாங்கம் கோப் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினரை நியமிக்கும் நடைமுறையை பின்பற்றிய போதிலும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை கோப் தலைவராக நியமித்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கோப் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தனிப்பட்ட நடத்தைக்கு எதிராக, குறிப்பாக நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை சுமத்துவது அதிருப்தி அளிப்பதாகவும், இதுவும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையை இழக்க உதவுவதாகவும் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தற்போது தயாசிறியும் கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.