ஆராச்சிக்கட்டுவ – ஆனவிழுந்தாவ உப ரயில் நிலையத்திற்கு உட்பட்ட மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலுடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (19) பிற்பகல் 3.30 மணிக்கு தனது இரண்டு பிள்ளைகளை மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது சுமார் 50 மீற்றர் தூரம் வரை மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், உயிரிழந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளினதும் சடலங்களையும், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் ரயில் ஊழியர்கள் முந்தல் ரயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆராச்சிக்கட்டுவ அடிப்பல பகுதியைச் சேர்ந்த 39 வயதான நான்கு பிள்ளைகளின் தாய் மற்றும் 9 வயதான அவரது மகனும், 8 வயதுடைய மகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்