கல்வி மற்றும் உயர்கல்வி கண்காட்சிப் பட்டறை (Skills Sri lanka -2024) களுத்துறை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கல்வி அமைச்சு, திறன் அபிவிருத்தி தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் பிரிவு, களுத்துறை திறன் அபிவிருத்திப் பிரிவு, களுத்துறை, பேருவளை பிரதேச செயலகங்கள் ஏற்பாடு செய்திருந்த மேற்படி கல்விக் கண்காட்சி களுத்துறை மாவட்ட செயலக புதிய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டுச் சென்ற மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த கல்விக்கண்காட்சி வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
எதிர்கால உலகத்தின் இலக்குகளை வெற்றிகொள்வதற்கு கிரமமான மற்றும் முறையான நிறுவனங்களில் தொழிற்கல்வி தகைமை பெற்றுக்கொள்ளும் முக்கியத்துவம் தொடர்பில் மாவட்ட செயலாளர் ஜீ.பிரசன்னகுமார கருத்துரை நிகழ்த்தி மேற்படி வேலைத்திட்டத்தின் நோக்கம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.
களுத்துறை கல்வி வலய பாடசாலைகளின் மாணவர்கள் பட்டறையில் கலந்து கொண்டதுடன் அரசசார்பற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் இந்த வேலைத்திட்டத்தில் பங்களிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. களுத்துறை மாவட்ட திறன் அபிவிருத்தி அலுவலர், களுத்துறை மற்றும் பேருவளை பிரதேச செயலக திறன் அபிவிருத்தி அதிகாரிகள் இந்த வேலைத் திட்டத்தின் இணைப்பாளர்களாக செயல்பட்டனர். இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் சதுரிகா கஜநாயக, future lanka development foundation பணிப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்…
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)