இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடருக்கு பங்களாதேஷ் அணியில் துடுப்பாட்ட வீரர் மஹ்மூதுல்லா ரியாத் மற்றும் தயிஜுல் இஸ்லாம் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அணித்தலைவரான மஹ்மூதுல்லா கடைசியாக 2021 இல் சிம்பாப்வேயுக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியிலேயே ஆடி இருந்தார். எனினும் தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் சோபித்து வரும் நிலையிலேயே அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான தைஜுல் கடைசியாக 2019இல் தனது இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியிருந்தார். அதேபோன்று பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் சிறப்பாக ஆடி வரும் ஆரம்ப வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் முஹமது நயிம் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இதில் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன் இடம்பெறாத நிலையில் ஒரே ஒரு புதுமுக வீரராக அலிஸ் அல் இஸ்லாம் டி20 குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கண் பிரச்சினை ஒன்றால் அவதிப்பட்டு வரும் ஷகீப் இலங்கைக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்திலும் இடம்பெறவில்லை.
எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி பங்களாதேஷை சென்றடையும் இலங்கை அணி தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவுள்ளது.
இதில் பங்களாதேஷ் அணியில் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நஸ்முல் ஹொஸைன் ஷன்டோ இந்தத் தொடரில் பங்களாதேஷ் அணியை வழி நடத்தவுள்ளார். இதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகளும் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறும்.