10வது தேசிய சாரணர் ஜம்போரி எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 20,000 சிறுவர், சிறுமியர் மற்றும் தலைவர்களும் பங்குபற்றவுள்ளதாக இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ தெரிவித்தார். “மாற்றத்திற்கான தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் ஜம்போரியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையின் பிரதம சாரணர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதம ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய ஜம்போரிக்கு பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 500 சாரணர் சிறுவர்கள், பெண்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றுகூடுவார்கள் என்றும், ஜம்போரி வரலாற்றில் முதல்முறையாக, பெண் சாரணர்களும் முகாமிடுவார்கள் என்றும் அவர் கூறினார். 37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 12000 சாரணர்கள் 7 நாட்களுக்கு முகாமில் ஈடுபடவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.