கித்துள் உற்பத்திப் பொருட்களை சர்வதேச தரத்தில் சந்தைப்படுத்துவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய கித்துள் உற்பத்தி தொழிற்சாலையை கண்டி மாவட்டத்தில் நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள நியங்கொட பாடசாலை கட்டட வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கித்துள் உற்பத்திப் பொருட்கள் தொழிற்சாலை தொடர்பாக விசேட கலந்துரையாடல் கண்டி ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கித்துள் உற்பத்திகளான சொக்கலேட், கருப்பட்டி, கித்துள் பாணி உள்ளிட்ட உற்பத்திகளை சர்வதேச தரத்துக்கமைய இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கவுள்ளதாகவும் தற்போது கித்துள் உற்பத்திகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளில் அதிகளவான கிராக்கி உள்ளதாகவும், ஆளுநர் தெரிவித்தார்.
மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சும் Green Globe Organics எனும் தனியார் நிறுவனமும் இணைந்து ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் இதற்கான பணியை முன்னெடுக்கவுள்ளது. முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபாவும் இரண்டாம் கட்டமாக 67 மில்லியன் ரூபாவும் இதற்காக செலவிடப்படவுள்ளது.
கித்துள் உற்பத்திப் பொருட்கள் தொழிற்சாலையால் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்ய முடியுமெனவும் இதனால் கித்துள் உற்பத்தியாளர்கள் பெரிதும் நன்மை அடைய முடியும். அத்துடன் பல நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகள் உருவாகுமெனவும், ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
மாத்தளை சுழற்சி நிருபர்