புதிய இலத்திரனியல் தேசிய அடை யாள அட்டை தொடர்பான பிரஜைகளின் (Biometric) பயோமெற்றிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான உட்கட்டமைப்புகள் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாக பிரஜைகளின் பயோமெற்றிக் தரவுகள், கைரேகைகள் மற்றும் முக அடையாளங்கள் தொடர்பான தரவு சேகரிப்பு ஆரம்பிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், நீண்டகாலமாக நடைமுறைப்படுத்த முடியாமலிருந்த இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்பாடு இந்த வருடத்தில் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும்.
பெப்ரவரி மாதம் குருநாகல் மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் ஆட்களை பதிவு செய்வதற்கான இரண்டு மாகாண அலுவலகங்கள் நிறுவப்பட்டு, அதில் ஒரு நாள் சேவைகள் வழங்கப்படுமென்றார்.
தற்போது ஆட்பதிவு அலுவலகத்துக்குச் சொந்தமான தரவு கட்டமைப்பிலிருந்து சுமார் 90 நிறுவனங்கள் சேவைகளை பெற்று வருகின்றன. மேலும் இதனை விரிவுபடுத்துவதன் மூலம் மார்ச் மாதத்திலிருந்து மேலும் பல நிறுவனங்களுக்கு சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.