உழைக்கும் மக்களின் உணர்வுகளை உலகிற்கு பிரகடனம் செய்யும் மே நாளில், தமிழர் தேசம் தலைநிமிர, சரியான திசைவழியில் அணிதிரள அனைவரும் உறுதிக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகெங்கும் பரவிக் கிடந்த தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தகர்க்க – உரத்த நியாயங்களை வெல்ல, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முயற்சித்தமைக்கான வெகுமதியே, இன்றைய மேதினமாகும். இந்த வரலாற்று படிப்பினை எமக்கும் முன்னுதாரணமாய் நிமிர்ந்து நிற்கின்றது. சரிநிகர் உரிமைகளை பெற்றவர்களாய் எமது மக்கள், எமது தாயகமெங்கும் உறுதியாக வாழ வேண்டுமாயின் பலமான பொருளாதாரம் அவசியம். இந்த புரிதலின் அடிப்படையிலேயே, எமது மக்களுக்கான பல்வேறு பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சியில் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றோம்.ஆனால், பிரச்சினைகளற்ற கௌரவமாக வாழும் சூழலை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்களாயின், தங்களுடைய வெற்று அரசியல் சூனியமாகிவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். எமது முயற்சிகளுக்கு சேறு பூசும் கனவோடு ஒன்றுபட்டும் நிற்கின்றனர்.
அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்தி, அரசியல் தீர்வு போன்றவற்றை நிவர்த்தி செய்யும் எதிர்பார்ப்புக்களை மனதில் சுமந்திருக்கும் எமது மக்கள், மதிநுட்ப சிந்தனைகளை ஏற்று நடைமுறை சாத்திய வழிமுறையில் திரண்டெழ வேண்டும்.
தாயக தேசமெங்கும் தமது எதிர்பார்ப்புக்களை நிலைநிறுத்த எமது மக்கள் இனிவரும் காலங்களை தம் கைகளில் எடுப்பர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.