அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அட்டாளைச்சேனை கிளையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச முக்கியஸ்தர்களுடனான சிநேகபூர்வ கலந்துரையாடல் அண்மையில் அட்டாளைச்சேனை பீச் ஹவுஸில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான மெளலவி யூ.எம்.நியாஸி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெளலவி ஏ.சீ.முகம்மது பாக்கவி,
அக்கரைப்பற்று அபூவக்கர் சித்தீக் அரபுக் கல்லூரியின் அதிபர் மெளலவி எம்.எம்.கலாமுல்லாஹ் (றசாதி) பிரதம வளவாளராக கலந்து கொண்டு இஸ்லாமிய நடைமுறைகள் பற்றிய பல்வேறுபட்ட விளக்கங்களை இங்கு முன்வைத்தனர்.
இதன் போது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் கல்வி, கலை, கலாசாரம், சமூக விழுமியங்கள், போதைப்பொருள் ஒழிப்பு, மாணவர்களின் ஒழுக்க நடைமுறைகள், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் புத்திஜீவிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் உலமாக்கள் உட்பட ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், இக்குழுக்கள் ஊடாக பிரதேசத்தில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளரும், சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான என்.ரீ.நஸீர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், உதவி கல்விப்பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ.றசீட், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் யூ.எம்.வாஹிட், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ. பாயில், கல்விமான் எஸ்.எல்.எம்.பழீல், டொக்டர் கே.எல்.எம். நக்பர், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி மற்றும் மூத்த உலமாக்கள், அட்டாளைச்சேனை பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகள் மற்றும் அட்டாளைச்சேனை ஜம்இய்யதுல் உலமாவின் பதவிவழி உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முகம்மது றியாஸ்
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்