மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட, பல இலட்சம் ரூபா பெறுமதியான சிறியளவிலான சங்குகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) மதியம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் பொலிஸார் இணைந்து சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, எருக்கலம்பிட்டியிலுள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சங்குகளை அவர்கள் கைப்பற்றியதுடன், சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். இந்தக் களஞ்சியசாலையில் 20 ஆயிரம் சங்குகளே களஞ்சியப்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்குகளும் வளர்ச்சி நிலைைய அடையாத சங்குகளும் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் களஞ்சியசாலையிலிருந்து 14,143 சங்குகள், 16 கிலோகிராம் காய்ந்த அட்டைகள், 700 உயிர் அட்டைகளையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக சான்றுப் பொருட்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மன்னார் குறூப் நிருபர்