முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குற்றச்சாட்டில் கிராம அலுவலர் ஒருவர் உட்பட இருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றி வரும் சந்தேக நபரான கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கு போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்ததாகவும் ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருளை பல இளைஞர்களூடாக பல்வேறு தரப்பினருக்கும் இவர் விற்பனை செய்து வந்ததாகவும் இவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்ததாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இச்சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மாங்குளம் குறூப் நிருபர்