உழவர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை உலக வாழ் இந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் புத்தளம் மாவட்டத்தில் இந்து மக்கள் செறிந்து வாழும் பல பிரதேசங்களில் தைப் பொங்கல் பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இந்து மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று (15) அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகளிலும் சிறுவர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்திலும் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
ஆலய பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ எஸ்.பத்மநாபக் குருக்கள் தலைமையில் இன்று காலை 6.00 மணியளவில் ஆலயத்தில் பொங்கல் பொங்கி விஷேடபூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.
இந்த பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பிரதேசத்தில் உள்ள பக்த அடியார்கள் மாத்திரமன்றி, நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து இன மத பேதமின்றி அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்