அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் கடந்த பெரும்போக நெற்செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜர்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படவிருந்த வேளாண்மை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கமநல சேவை அபிவிருத்தி நிலையத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்பு தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.
எனினும் சிறுபோக நெற் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் எவ்விதமான இழப்பீடு அல்லது மானியம் இதுவரை வழங்கப்படவில்லையெனவும், இதனால் விவசாயிகள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் பெற்று வேளாண்மைச் செய்கையை மேற் கொண்ட விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில விவசாயிகள் சிறு போக நெற் செய்கை பண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுகளை விரைவாக வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 27 கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 48 ஆயிரத்தி 822 ஹெக்டேயர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் விசேட நிருபர்