யாழ். மல்லாகம் பிரதேசத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த மாடறுக்கும் மடுவமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் வைத்து மூடப்பட்டது. இதேவேளை அம்மடுவத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
மல்லாகத்தில் உரிய அனுமதியின்றி இம்மடுவம் இயங்கி வந்தமை தொடர்பாக சுகாதாரப் பிரிவினருக்கு கடந்த திங்கட்கிழமை கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். இதன்போது அம்மடுவத்திலிருந்து மாடொன்று, கன்றுக்குட்டியொன்று, மாடு வெட்ட பயன்படுத்தும் கூரிய ஆயுதங்கள், மாடு கட்டும் கயிறு உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களை நீதிமன்றத்தில் பாரப்படுத்திய போது, மாடு மற்றும் கன்றுக்குட்டியை தெல்லிப்பழையிலுள்ள அன்பு இல்லத்தில் வைத்து பராமரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மாடுகள் மடுவத்துக்கு கடத்திக்கொண்டு செல்லப்பட்டு இறைச்சிக்கு வெட்டப்பட்டவையா? இறைச்சிக்கு வெட்டப்பட்ட மாடுகள் திருடப்பட்டவையா? பசு மாடுகளும் இறைச்சிக்கு வெட்டப்பட்டவையா? ஆகிய கோணங்களில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்.விசேட நிருபர்