உலகின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகவும், 19ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மீகவாதியாகவும் விளங்கியவர் சுவாமி விவேகானந்தர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனான இவர் வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர் ஆவார்.
கல்கத்தாவின் விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வராக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். பெற்றோர் இவருக்கு நரேந்திரன் எனப் பெயரிட்டனர்.
இவரது தாய் மொழி வங்காளம், இளம் வயதிலேயே தியானம் பழகினார். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
மிகுந்த பகுத்தறிவாளராகவும் திகழ்ந்த இவர் இசை மற்றும் தியானத்தில் ஆற்றல் கொண்டவராக விளங்கினார்.1879-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்கத்தாவில் உள்ள மாநில கல்லூரியில் விவேகானந்தர் சேர்ந்தார்.
ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அந்த சமயத்தில் அனைத்து மேற்கத்திய தத்துவங்களையும் அவர் முழுவதுமாகப் படித்தார்.
மேலும் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு ஆகியவற்றினையும் முழுமையாக அறிந்துகொண்டார்.
இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் தான் இவர் “சுவாமி விவேகானந்தர் வீரத்துறவி100 இளைஞர்களைத் தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்” என்றார். ஒவ்வொரு இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர்.
இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதிக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.
விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மை விட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1893ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொண்டார்.
இங்கு விவேகானந்தர் ஆற்றிய உரையின் மதிப்பினை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்களாக மாறினர். மேலும் 4 ஆண்டுகள் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்த அவர் உலகம் முழுவதும் விவேகானந்தா மிஷன் மற்றும் விவேகானந்தா மடம் என்று நிறுவி தனது கருத்துக்களைப் போதித்து வந்தார்.
சுவாமி விவேகானந்தரின் இறப்பு குறித்த எண்ணற்ற கருத்துக்கள் நிலவுகின்றன.
எனினும் தனது சொந்த ஊரான கல்கத்தாவில் பேலூர் எனும் இடத்தில் தனது மடத்தில் 1902ஆம் ஆண்டு ஜூலை 4 நாள் தனது 39ஆவது வயதில் இறந்தார்.