கொழும்பிலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு வாகனங்கள் மூலம் போதைப் பொருள் கடத்திச் செல்வதை தடுக்கும் வகையில் கொழும்பு, நிட்டம்புவ, நீர்கொழும்பு, மொறட்டுவ உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வீதிச் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கொழும்பிலிருந்து தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் பஸ் வண்டிகள் மற்றும் ஏனைய சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் இந்த வீதிச் சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் பயணிகளின் பயணப் பைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது போதைப் பொருளுடன் பல சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒன்றை பொலிசார் ஒட்டுவதாகவும் அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்படும் போது அடுத்து வரும் சோதனைச் சாவடியில் குறித்த வாகனம் அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்றுக் காலை 6:00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலக குழுக்களை இனங்கண்டு கைது செய்யும் யுக்திய சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மூலம் 1133 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் போது ஹெரோயின், ஹசீஸ், உள்ளிட்ட போதைப் பொருள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளையும் கைப்பற்ற முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ள 54 பேரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் 38 போதைப் பொருளுக்கு அடிமையான நபர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்