பொலிஸ் கிரிக்கெட் கழகத்தை கடந்த ஆண்டு தொடக்கம் பிரதிநிதித்துவம் செய்து வரும் இலங்கையின் நான்கு கிரிக்கெட் வீரர்கள் இலங்கை பொலிஸில் இணைந்துள்ளனர்.
அதன்படி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் பரிசோதகர்களாகவும் அஷேன் பண்டார மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் பொலிஸ் பரிசோதகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 13 ஆண்டுகளாக கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு ஆடிய குசல் பெரேரா பொலிஸ் சேவையில் இணைந்து பின்னர் பொலிஸ் அணியில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு வீரர்களும் ஆடும் பொலிஸ் கிரிக்கெட் அணி அண்மையில் நிறைவடைந்த முதல் தர கிரிக்கெட் தொடரில் இணை சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த நான்கு வீரர்களுக்கும் பொலிஸில் இணைவதற்கான உத்தியோகபூர் நியமனக் கடிதங்களை வழங்கியதோடு பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.