பாகிஸ்தான் அரசாங்கம் கண்டி வாழ் மக்களுக்கும் கண்டி ஜின்னா ஞாபகார்த்த நிலையத்துக்கும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக பாகிஸ்தான் நாட்டு உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ஐந்து பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களும் மற்றும் 150 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் வைபவம் கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் எச். சலீம்டீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் பாகிஸ்தான் நாட்டு உயர்ஸ்தானிகர் ஓய்வுப் பெற்ற மேஜர்ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி கலந்து கொண்டு சிறப்பித்தார். பாகிஸ்தான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார், முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. சி. எம் ரஹ்மான்,கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர். ஏ. சத்தீக், முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் முக்கியஸ்தர்களான ஆசீக், அஹமட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயம், கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரி, மடவளை மதீனா தேசிய பாடசாலை , கண்டி லும்பினி ரோயல் கல்லூரி மற்றும் கண்டி சுமங்கல கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டைத் துறையை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவத்தகம தினகரன் நிருபர்