பன்னிரெண்டு கோடி ரூபா பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கநகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் குழுவால் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய இந்தியப் பெண்ணான இவர் கண்டியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் இந்த நாட்டில் வசிக்க வதிவிட விசாவைப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
டுபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன் விமானமான EK-648 இல் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் தனது இரண்டு சிறிய குழந்தைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர் வந்திருந்தார். தனது இடுப்பில் பிரத்தியேக பட்டியொன்றை கட்டிக்கொண்டு அதில் 08 பார்சல்களில் வைக்கப்பட்டிருந்த 1,438 பவுண் நகைகளை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.