உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசியல் உரிமைகளுக்கு உரித்தான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி நியமிக்கப்படாமலேயே ஒத்திப்போடப்பட்டுள்ளதன் காரணமாக எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள குழுவொன்றை நியமிப்பது சிறந்தது என தேர்தல் ஆணையாளர் நாயகத்தினால் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க, மேற்படி குழுவின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கப்பாடு கிடைத்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2023.04.25ஆம் திகதி முதல் 2023.05.08ஆம் திகதி வரையான காலத்தை சம்பளத்துடனான விடுமுறையாக பணித்து அடிப்படை சம்பளத்தை வழங்குதல், மற்றும் 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிகாரிகள் 2023.05.08ஆம் திகதிய பொதுநிர்வாக அமைச்சின் 07/2023 சுற்றறிக்கைக்கிணங்க கண்டிப்பாக கடமைக்கு சமுகமளிக்குமாறு உறுதிப்படுத்தல். அத்துடன் அரசியல் உரிமைக்கு உரித்தான அரசாங்க ஊழியர்களின் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான விடயங்களை உள்ளடக்கிய பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையை வெளியிடுதல் ஆகிய விடயங்களே பிரதமரின் யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
(லோரன்ஸ் செல்வநாயகம்)