ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட அசிய கிண்ண தொடரின் பி குழு போட்டியில் இலங்கை இளையோர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
டுபாயில் நேற்று (11) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி ஆரம்பம் தொட்டு முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 3 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட்டை இழந்த இலங்கை இளையோர் 115 ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்தது.
மத்திய வரிசையில் தினுர களுபஹன நிதானமாக ஆடி 87 பந்துகளில் 2 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது பெற்ற 56 ஓட்டங்களுமே அதிகபட்சமாக இருந்தது. அணித் தலைவர் சினத் ஜயவர்தன 65 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 49 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார்.
இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியம் சார்பில் ஒமித் ரஹ்மான் மற்றும் அயான் அப்ஸால் கான் தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை இளையோர் அணியின் முதல் இரு விக்கெட்டுகளையும் 31 ஓட்டங்களுக்குள் வீழ்த்த கருக செங்கத்தினால் முடிந்தது. எனினும் முதல் வரிசையில் வந்த டனிஷ் சூரி அபாரமாக துடுப்பெடுத்தாடி ஐக்கிய அரபு இராச்சியத்தின் நம்பிக்கையை அதிகரித்தார். 88 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 4 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ஓட்டங்களை பெற்றார்.
தொடர்ந்து மத்திய பின் வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடி ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் அந்த அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இதன்போது இலங்கை இளையோர் சார்பில் கருக செங்கத் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இலங்கை இளையோர் தனது முதல் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்திய நிலையில் அது தொடரின் அரையிறுதிக்கு முன்னேற போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.
இலங்கை தனது கடைசி குழு நிலை போட்டியில் நாளை (13) பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை அரையிறுதிக்கு முன்னேற இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதோடு ஐக்கிய அரபு இராச்சியத்தை விடவும் நிகர ஓட்ட வேகத்திலும் முன்னிலை பெறுவது கட்டாயமாகும்.