புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்துதல், சர்வதேச தொழில் சந்தையில் வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பணத்தை சரியான முறைகளில் நாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இது தொடரல்பான கொழும்பு அமைப்பின் செயற்குழு கூட்டம் இன்று (12) ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (12) ஆரம்பமாகவுள்ள கொழும்பு செயல்பாடு (Colombo Process) அமைப்பின் செயற்குழு கூட்டம் தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் International Organization for Migration இணைந்து இலங்கை இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தின் கலந்துரையாடல் எதிர்வரும் (14) வரை நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்புக்கு இலங்கை, பங்காள தேஷ், பாகிஷ்தான் ஆகிய நாடுகள் தலைமை தாங்குகின்றன.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான பிராந்திய ஆலோசனை செயல்முறை, புலம்பெயர்ந்தோரின் குடும்பங்கள், அவர்களுக்கான பாதுகாப்பு, தொழிலாளர்களை முறையாக மற்றும் கண்ணியமான முறையில் நிர்வகிப்பதற்கான விடயங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
இவ்விடயங்கள் தொடர்பில் நாடுகளுக்குள்ள அனுபவங்கள் மற்றும் திட்ட நலன்கள் குறித்த கருத்துகள் இதில் பரிமாறப்படவுள்ளன.
இதனை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயணயக்கார தெரிவித்தார்.