இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2ஆவது T20 கிரிக்கெட் போட்டி கேபர்ஹாவில் இன்று (12) இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் டர்பன் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இருஅணிகளும் 2ஆவது ஆட்டத்தில் கேபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.
இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை இன்றைய ஆட்டமும் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள T20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைப்பதில் இந்திய அணி நிர்வாகத்துக்கு சிக்கல் எழக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.