சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட மலையகத்தவர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டுமென்பதே, தமது நிலைப்பாடென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தால் இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறை சரி செய்வதற்கு இலங்கை, இந்திய அரசுகள் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஒரு தரப்பினருக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
இதனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது மக்களுக்கு இலங்கையில் குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம்.
இந்த வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். எமது மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டும் நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இவை போதுமானவை அல்ல. பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.