எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு தொகை அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் அதற்கு சமமான ஒருவகை அரிசியை இவ்வாறு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பா அரிசியை சந்தைக்கு விற்பனைக்கு விடாமல் அதனை பதுக்கி வைத்துள்ளதால் சந்தையில் தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கும் தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க பண்டிகைக் காலங்களில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையிலேயே அரிசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்குவதற்கு பாரிய நெல் ஆலைஉரிமையாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். அவர்களின் சூழ்ச்சியை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்த்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் சதொச நிறுவனம் மூலம் நுகர்வோருக்கு விசேட விலைக் கழிவுடன் அரிசியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த ஒன்பது வருடங்களிற்குப் பின்னர் கடந்த பத்து மாத காலமாகவே சதொச நிறுவனம் இலாபமீட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்