ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சர்வமத தலைவர் அஸ்ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அண்மையில் நியமிக்கப்பட்டதை முன்னி்ட்டு, ஸ்ரீ லங்கா கதீப் முஅத்தின் நலன்புரி அமைப்பினால் தெமட்டகொடையில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் வைத்து அண்மையில் விஷேட வரவேற்பு அளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
சம்மேளனத்தின் தலைவர் மௌலவி அப்துல் ஜப்பார், செயலாளர் கலாபூஷணம் மௌலவி நாகூர் றஹீம், சம்மேளனத்தின் ஆலோசகர் சியாட் ஹமீத் உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஞாபகார்த்தமாக ஹஸன் மௌலானாவினால் மரக் கன்று ஒன்றும் நாட்டப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
கலாநிதி ஹஸன் மௌலானா 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு சர்வமதத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஏ.எஸ்.எம்.ஜாவித்