நாட்டில் சீனி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் சீனிக்கான வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் 19,000 மெற்றிக் தொன் சீனி சந்தையில் காணப்படுவதாகவும் அதனால் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படவோ அல்லது அதிகமான விலை விதிப்பு மேற்கொள்வதற்கான எத்தகைய அவசியமோ கிடையாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிகரித்த விலையில் சீனியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைப்புச் செய்யும் நடவடிக்கைகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிர்ணய விலையில் சீனியை கொள்வனவு செய்தல் மற்றும் சீனி தொடர்பில் வீண் தட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் உரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான முறைகேடுகளின் போது, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு மக்கள் அறிவிக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)