ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோதும் உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேற இலங்கை அணிக்கு தொடர்ந்து வாய்ப்பு உள்ளது. எனினும் அது மிகக் கடினமானதாகவும் உள்ளது.
இலங்கை அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4இல் தோற்று 2 ஆட்டங்களில் வெற்றியீட்டி 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்தில் காணப்படுகிறது.
இந்நிலையில் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் இரண்டு அணிகள் 12 அல்லது அதற்கு மேல் புள்ளிகளைப் பெற்று எஞ்சிய அணிகளில் அதிகபட்சமாக ஏழு அணிகள் எட்டுப் புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு அடுத்து உள்ள இரண்டு இடங்களுக்கு போட்டியிட சாத்தியம் உள்ளது.
எனவே, இலங்கை அணிக்கு மேலும் மூன்று போட்டிகள் எஞ்சியிருப்பதோடு அதன்மூலம் அதிகபட்சமாக 10 புள்ளிகளை பெற வாய்ப்பு உள்ளது. எனினும் கடந்த போட்டிகளில் இலங்கை அணியின் ஆட்டம் மோசமாக இருந்ததோடு எதிர்வரும் போட்டிகளில் பலமான அணிகளை எதிர்கொள்ளவிருப்பதால் இலங்கை அணி இந்த சவாலை வெல்வது கடினமானதாக இருக்கும்.
இலங்கை அணி நாளை (02) புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. போட்டியை நடத்தும் இந்திய அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதல் அணியாக உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி தனது கடைசி இரு போட்டிகளிலும் எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு நவம்பர் 09 ஆம் திகதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் சவால் மிக்கவை என்பதால் இலங்கை அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஆறு போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்று 5 ஆவது இடத்தில் காணப்படுகிறது. அந்த அணிக்கு மேலும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் மொத்தமாக 12 புள்ளிகளை பெற முடியும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) அந்த அணி நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளை பெற முடியுமாக இருந்தால், ஏனைய போட்டிகள் தமக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.