Sunday, April 28, 2024
Home » காசா மருத்துவமனை தாக்குதலை அடுத்து அரபுலகெங்கும் பெரும் ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு

காசா மருத்துவமனை தாக்குதலை அடுத்து அரபுலகெங்கும் பெரும் ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு

இஸ்ரேல் சென்ற பைடனின் இராஜதந்திர முயற்சிகளும் ஸ்தம்பிதம்

by gayan
October 19, 2023 6:11 am 0 comment

காசா மருத்துமனை மீதான தாக்குதல் முஸ்லிம் உலகெங்கும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நேற்று இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கான ஆதரவை உறுதி செய்ததோடு, எந்த ஆதாரத்தையும் வெளிப்படுத்தாது மருத்துமனை தாக்குதல் இஸ்ரேல் அன்றி வேறு தரப்பால் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அல் அஹ்லி அல் அரபி மருத்துமனை மீது நேற்று முன்தினம் (17) நடத்தப்பட்ட வான் தாக்குதல் 12 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காசா மீதான தொடர் தாக்குதலின் பயங்கர நிகழ்வாக இருந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் பைடனின் பிராந்தியத்திற்கான அவசர விஜயத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலை அடுத்து அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பை அரபுத் தலைவர்கள் ரத்துச் செய்தனர்.

சுமார் 500 பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டினர். எனினும் இதனை மறுக்கும் இஸ்ரேல், பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் வீசிய ரொக்கெட் குண்டு ஒன்றே தவறி மருத்துவமனை மீது விழுந்ததான கூற்றை நிறுவ முயன்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இஸ்ரேலை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதியை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார். தென்யாகுவை அருகில் வைத்து பேசிய பைடன்: காசா மருத்துவமனையில் இடம்பெற்ற வெடிப்பு பெரும் கவலையையும் கோபத்தையும் தருகிறது. நான் பார்த்ததன் அடிப்படையில், நீங்களன்றி (நெதன்யாகு) மற்ற தரப்பு மூலமே இது நடத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

பைடனின் மத்திய கிழக்கு விஜயம் ஓர் அமைதி முயற்சியாகவே இருந்தது. அவர் ஜோர்தான், எகிப்து மற்றும் பலஸ்தீன அதிகாரசபை தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றுக்காக அம்மான் செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் மருத்துவமனை தாக்குதலை அடுத்து அந்த மாநாட்டை அரபுத் தரப்பினர் ரத்துச் செய்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் உறுதியான ஆதரவுக்கு நெதன்யாகு, பைடனிடம் நன்றியை தெரிவித்துக்கொண்டார். “இஸ்ரேலிய தேசத்தை பாதுகாப்பதற்காக இறைவன் உங்களுக்கு அருள்பாலிக்கட்டும்” என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

எனினும் மருத்துவமனை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் மீது குற்றம் சுமத்தும் அரபுலகம் அதற்கு கடும் கோபத்தை வெளியிட்டு வருகிறது. இதற்கு எதிராக லெபனான், ஜோர்தான், லிபியா, யெமன், துனீசியா, துருக்கி, மொரோக்கோ, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையிலும் பெரும் ஆர்ப்பட்டங்கள் வெடித்தன.

இதில் 2020 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்திய ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் மொரோக்கோ இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலை கடுமையாகக் கண்டித்தன. அதேபோன்று இஸ்ரேலோடு உறவை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அண்மையில் அதனை இடை நிறுத்திய சவூதி அரேபியா, இந்தத் தாக்குதல் “இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை செய்த கொடூரமான குற்றம்” என்று குறிப்பிட்டது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் வேண்டுமென்று நடத்தப்பட்டது என்றும் சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறி இருப்பதாகவும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கும் கட்டார் இதனை “கொடூரமான படுகொலை” என்று சாடியதோடு, “இந்த மோசமான சம்பவத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும்” என்று ஜோர்தான் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இது ஒரு போர் குற்றம் என்றும் மனித குலத்திற்கு எதிரான செயல் என்றும் திட்டமிட்ட அரச பயங்கரவாதம் என்றும் தெரிவித்தது.

அரபு லீக் தலைவர் அஹமது அப்துல் கெயித், இந்த பேரவலத்தை உடன் நிறுத்த வேண்டும் என்று உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். “மருத்துவமனை ஒன்றில் பாதுகாப்பற்றிருக்கும் மனிதர்கள் மீது தாக்குவதற்கு எத்தனை கொடூரமான மனம் வேண்டும்?” என்று முன்னர் ட்விட்டர் என்று அறியப்பட்ட எக்ஸ் சமூகதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலை அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக “கோபத்தின் தினத்தை” நேற்று அறிவித்தது. லெபனானின் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் தூதரகங்களுக்கு நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தியதோடு பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

திரிபோலி மற்றும் பிற லிபிய நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி, காசா மக்களுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியபடி ஒன்று திரண்டனர். ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ், பிரெஞ்சு தூதரகங்களுக்கு வெளியிலும், துருக்கி மற்றும் ஜோர்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டனர்.

இதேவேளை மருத்துமனை மீதான தாக்குதலை அடுத்து மேற்குக் கரையில் ஏற்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தில் பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு எதிராக மக்கள் கோசம் எழுப்பியதோடு பலஸ்தீன பாதுகாப்பு தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இஸ்ரேல் சிவப்பு கோட்டை தாண்டி இருப்பதாக சாடிய மஹ்மூத் அப்பாஸ், மருத்துவமனை மீதான தாக்குதல் கொடூரமாக படுகொலை என்றும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்காக அவர் மூன்று நாள் துக்க தினத்தையும் அறிவித்துள்ளார்.

மருத்துமனை மீதான இந்தத் தாக்குதலுக்கு உலகெங்கும் இருந்து பெரும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

குவிந்து கிடக்கும் சிதறிய உடல்கள்

கடந்த செவ்வாய் இரவு (17) அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன. இரத்தம் தோய்ந்த, உடல் சேதமான மக்கள் இருளில் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்படுகின்றனர். இடிபாடுகள் நிறைந்த தெருவில் உடல்களும் சிதைந்த வாகனங்களும் கிடக்கின்றன.

ஏவுகணை ஒன்று அப்பகுதியைத் தாக்குவதையும் அதைத்தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் ஒரு வீடியோ காட்டுகிறது.

“எல்லை கடந்த மருத்துவர்கள்“ என்ற மனிதாபிமான உதவி அமைப்பைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் காசன் அபு சித்தா, இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், தாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும் கூறினார். இந்தச் சம்பவத்தை ‘ஒரு படுகொலை’ என்று அவர் விபரித்தார்.

மீட்பாளர்கள் இரத்தம் தோய்ந்த இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இதில் 300 பேர் வரை உயிரிழந்திருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு தலைவர் ஒருவர் குறிப்பிட்டபோதும், சுகாதார தரப்பு 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் மீட்பாளர்கள் தொடர்ந்து சடலங்களை மீட்டு வருவதாக பலஸ்தீன அமைச்சரவை பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார்.

“மக்கள் ‘எம்மை காப்பாற்றுங்கள்’, ‘எம்மை காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டபடி சத்திரசிகிச்சை பிரிவுக்கு ஓடுகிறார்கள். மருத்துவமனைக்குள் இருந்தவர்களே காயமடைந்திருக்கிறார்கள்” என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பதல் நயிம் தெரிவித்தார்.

“மருத்துவமனை முழுவதும் இறந்த, சிதறடிக்கப்பட்ட சடலங்களே உள்ளன. எம்மால் முடிந்தவரை மக்களின் உயிரைக் காக்க நாம் முயன்றபோதும் மருத்துவ பணியாளர்களை விடவும் அந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அவர்கள் உயிருடன் இருப்பதை எம்மால் பார்க்க முடிந்தபோதும் அவர்களுக்கு உதவ எம்மால் முடியவில்லை. அவர்கள் உயிர்த்தியாகம் செய்துவிட்டார்கள்” என்றும் அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை தாக்குதலுக்கு மத்தியில் காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மருத்துமனை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10,859 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 12 நாட்களுக்குள் காசாவின் உயிரிழப்பு எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 51 நாட்கள் நீடித்த இஸ்ரேல்–காசா மோதலில் கொல்லப்பட்ட மொத்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கடையில் இடம்பெறும் மோதல்களில் மேலும் 62 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 1,250 பேர் காயமடைந்துள்ளனர்.

அங்கு இஸ்ரேலிய சுற்றுவளைப்பு தேடுதல்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை காசாவில் பொதுமக்களுக்கு எதிரான போருக்கு இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா மற்றும் அனைத்து மேற்குலக நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. லெபனானில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய ஹமாஸ் அதிகாரி ஒருவரான ஒசாமா ஹம்தான் இதனைத் தெரிவித்தார்.

காசாவுக்கான உதவிகள் அனுமதிக்கப்படாத நிலையில் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ஏற்கனவே காசாவில் மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்தை துண்டித்து முழு முற்றுகையை அமுல்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தவிர்த்து காசாவுக்கான ஒரே வாயிலான இருக்கும் எகிப்துடனான ராபா எல்லைக் கடவையில் எகிப்துப் பக்கமாக உதவிப் பொருட்களை ஏற்றிய நூற்றுக்கும் அதிகமான லொரிகள் காத்துள்ளன. இஸ்ரேலின் தொடர்ச்சியான வான் தாக்குதலுக்கு இடையே உதவி விநியோகத்தை மேற்கொள்ள முடியாதிருப்பதாக எகிப்து குறிப்பிட்டுள்ளது.

காசாவின் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து சுழல்வதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக உலக சுகாதார அமைப்பின் மருத்துவ விநியோகங்கள் எல்லையில் சிக்கி இருப்பதாகவும் இந்த மருத்துவ உதவிகளை அனுப்ப நாம் காத்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் உயிர்கள் பறிபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT