முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் தகவல்கள் அடிப்படையற்றன. மற்றும் இது,
உண்மைக்கு புறம்பானது என்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறு எந்தவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்பதை நீதியமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் குறிப்பிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நீதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும் அவர் சபையில் வலியுறுத்தினார். அதேவேளை,நீதிச்சேவை ஆணைக்குழு இது தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுக்கும்.என்றும், அதில் தாம் தலையிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவி விலகலை அறிவுவித்துள்ளார். ‘உயிரச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தாம் பதவி விலகுவதாக ‘நீதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளுக்கு மன உளைச்சல் இருப்பது இயல்பானதே,மன உளைச்சலால் பதவி விலகுவதானால் சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும். நீதிபதிகளுக்கு மாத்திரமல்ல சட்டத்தரணிகளுக்கும் மன உளைச்சல் உள்ளன.
உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.தனக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. உயிரச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கலாம்.
பொலிஸ்மா அதிபருக்கும் அறிவிக்கலாம்.ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை. இது தொடர்பில் செயற்படவுமில்லை.
பதவி விலகல் தொடர்பான கடிதத்தை நீதிபதி டி.சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி எழுதியுள்ளார்.எனினும், கடிதத்தை 2023.09.27 ஆம் திகதியே நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் அவர் கொழும்பில் தங்கியுள்ளார், இக்கலத்தில்,இரண்டு வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்துள்ளார்.
தனது காரை விற்பனை செய்துள்ளார், அத்துடன் வெளிநாட்டுப் பயணத்துக்கான விமானச்சீட்டை அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி ஊடாக பதிவு செய்துள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் பல சந்தேகங்கள் காணப்படுகின்றன.
லோரன்ஸ் செல்வநாயகம்