காத்தான்குடி பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் கள நடவடிக்கைக்காக எங்கு சென்றாலும் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அடையாளப்படுத்தி அது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் காத்தான்குடி பிரதேச செயலக கள உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பகுதி நாள் கூட்டத்தின் போதே காத்தான்குடி பிரதேச செயலாளர், செயலக கள உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கினார். இதன்போது டெங்கு நுளம்பு பரவுதல் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் காத்தான்குடி பிரதேச செயலகம் காட்டிவரும் ஒத்துழைப்பு தொடர்பாக விளக்கி கூறிய பிரதேச செயலாளர், காத்தான்குடி பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் கள நடவடிக்கைக்காக எங்கு சென்றாலும் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அடையாளப்படுத்தி அதுதொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மழைக் காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு நுளம்பு பரவும் வீதமும் அதிகரிக்கலாம்.
அதனால் அதனை நாம் கட்டுப்படுத்தி வீடுகள் சுற்றுப்புறச் சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் உட்பட திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)