பெனின் நாட்டில் எரிபொருள் கிடங்கு ஒன்று வெடித்து குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பெரும் தீப்பிழம்பு மற்றும் கறும்புகை மேலெழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரிய நாட்டு எல்லையை ஒட்டிய செமே பொட்ஜி நகரில் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட எரிபொருட்களை வைத்திருந்த களஞ்சியம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளது. இதனால் அருகில் இருந்த கார் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் தீயில் கருகியுள்ளன.
பிரதான எண்ணெய் உற்பத்தி நாடான நைஜீரியாவை ஒட்டிய பெனின் எல்லை பகுதிகளில் எரிபொருள் கடத்தல் வழக்கமான ஒன்றாக உள்ளது. சட்டவிரோத சுத்திகரிப்புகள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் குழாய்கள் எல்லை நகரங்கள் எங்கும் பரவிக் காணப்படுகின்றன.