ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 10 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது தொடர்பில் இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க ரசிகர்களிடம் மன்னிப்புக் கோட்டுக்கொண்டார்.
ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.
போட்டிக்குப் பின்னர் பேசிய தசுன் சானக்க கூறியதாவது,
“சிராஜ் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். துடுப்பாட்டத்திற்கு சிறந்த ஆடுகளம் என்று நான் நினைத்தபோதும் மழையுடனான காலநிலை ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. இது எமக்கு கடினமான நாளாக இருந்தது.
நாம் சற்று கவனத்துடன் ஆடி ஸ்திர நிலையை அடைந்த பின்னர் வேகமாக ஆடித்தாடி இருந்திருக்கலாம்.
(ஆசிய கிண்ணத்தில்) அதிக சாதகமான நிலைகள் இருந்தன. சுழற்பந்துக்கு சதீர மற்றும் குசல் ஆடிய முறை, அதேபோன்று அசலங்கவின் துடுப்பாட்டம். இந்த மூவரும் இந்தியாவில் துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளங்களில் அதிக ஓட்டங்களை குவிப்பார்கள். கடுமையான நிலைமைகளில் இருந்து மீண்டு வருவது எப்படி என்பது எமக்குத் தெரியும். நல்ல அணிகளை வீழ்த்தி நாம் இறுதிப் போட்டிக்கு வந்தது, சாதகமான சமிக்ஞை ஒன்றாகும்.
கடந்த சில ஆண்டுகளாக வீரர்கள் சிறந்த முறையில் ஆடி வருகிறார்கள். இங்கு பெரும் எண்ணிக்கையில் வந்த ரசிகர்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். நாம் உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார்.