ஐக்கிய நாடுகள் சபையின் 78வது கூட்டத்தொடர் நேற்று அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் ஆரம்பமாகியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெற உள்ளதுடன் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அதிகாலை நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத் தொடருக்கு சமகாலத்தில் நடைபெறும் ‘2023 நிலையான அபிவிருத்தி இலக்கு’ அரச தலைவர்கள் மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதில் கலந்து கொண்டுள்ளார்.
2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்.
அதற்கான நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளுதல் என்ற தொனிப் பொருளில் இம்முறை கூட்டத்தொடர் இடம் பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி பல்வேறு நாடுகளில் தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
லோரன்ஸ் செல்வநாயகம்