எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் பெரும் அதிர்ச்சியை கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அந்த சவலை எதிர்கொள்ள தமது அணி தயாராக இருப்பதாகவும் இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலகக் கிண்ணம் சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டபோது அங்கு வருகை தந்த தசுன் ஷானக்க இதனைத் தெரிவித்தார்.
தற்போது சில பிரச்சினைகளை எதிர்கொண்டபோதும் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் வலுவான நிலையை எட்ட எதிர்பார்ப்பதாக தசுன் கூறினார். இந்திய ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும் என்று நான் நினைப்பதோடு எம்மால் அந்த ஆடுகளங்களில் திறமையை வெளிப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ‘சிரேஷ்ட அல்லது கனிஷ்ட எந்த வீரராக இருந்தபோதும் அவர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். எமது கனிஷ்ட வீரர்களான மதீஷ பதிரண மற்றும் துனித் வெள்ளாலகே போன்றவர்கள் அணிக்காக விக்கெட்டுகள் மற்றும் ஓட்டங்களை பெறுவது நல்ல சமிக்ஞையாக உள்ளது. எனது அணியின் அனைவரும் சவாலுக்கு உளரீதியாக தயாராகி இருக்கின்றனர்’ என்றும் அவர் தெரிவித்தார். உலகக் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் நிகழ்வில் தசுன் ஷானக்கவுடன் இளம் வீரர்களான மதீஷ பதிரண மற்றும் துனித் வெள்ளாலகேவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.