பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் இன்று முதல் மீண்டும் திறப்பு

- திறக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட 62 பேரும் இன்று நீதிமன்றில்

ஹோமாகம - பிட்டிபனவிலுள்ள இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் இன்று (27) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படுவதாக, பல்கலையினன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர் நெலுவே சுமணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இவ்வாறு பல்கலைக்கழகம் திறக்கப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் கடந்த வருடம் (2022) டிசம்பர் 19ஆம் திகதி முதல் காலவரையறையின்றி மூடப்படுவதாக, அதன் நிர்வாகம் அறிவித்திருந்தது.

புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவத்தின் அடிப்படையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தை திறக்குமாறு கோரி பல்வேறு தடவைகளில் பல்கலை பிக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்ததோடு, கடந்த வியாழக்கிழமை (23) கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 48 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகேயும் உள்ளடங்குவதோடு, அவர்களுக்கு இன்று (27) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...