ளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் பணியை அயலக நலத்துறை உடனடியாக மேற்கொள்கிறது என்று சென்னையில் நடை பெற்று வரும் அயலக தமிழர் தின விழாவில் மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3- ஆம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலக தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்றும் (வியாழக்கிழமை), இன்றும் நடைபெறுகின்றன. இந்த விழாவில் இலங்கை, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் 1,400- க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க பதிவுசெய்து உள்ளனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த வெளிநாடுவாழ் தமிழர்கள் பங்கேற்கிறார்கள். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு அயலக தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில், சிறப்பு நிகழ்ச்சிகளாக 4 கலந்துரையாடல்களும், ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2- ஆவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) விழா பேருரை நிகழ்த்துவதுடன், ‘எனது கிராமம்’ என்ற முன்னோடி திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இந்த திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி கா.சண்முகம் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
அங்கு உரையாற்றிய அவர், இந்தியாவில் உள்ள மாநிலக்கட்சிகளிலேயே அயலக தமிழர்களுக்காக ஒரு அணியை தொடங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு. இந்தியாவிலேயே முன்மாதிரியாக வெளிநாட்டில் வாழும் தாய் நாட்டு மக்களுக்காக, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை தமிழக அரசு உருவாக்கியது. இப்போது 58 நாடுகளில் இருந்து விழாவிற்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு நன்றி என்றார்.