ராகுல் காந்தி கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்த நிலையில், கறுப்புநிற உடை அணிந்து நெற்றியில் திருநீறு, சந்தனம் வைத்து, கறுப்புநிற உடை அணிந்து அதிசய பாபா ஒருவரை சந்தித்து ஆசி பெற்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் ஆன்மிக தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இமயமலையின் அழகை ரசித்தபடி அங்கு சுவாமி தரிசனம் செய்யலாம். இங்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்றார். அங்குள்ள கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். இந்த வேளையில் ராகுல் காந்தி அங்கு தனது தம்பியான பா.ஜ.க எம்.பி வருண் காந்தி மற்றும் அவரது மகளை சந்தித்து உரையாடினார். மேலும் கேதார்நாத்தில் ராகுல் காந்தி அங்குள்ள சுவாமியார்கள் மற்றும் ஆன்மிக குருக்களை சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பயம் என்பது மனதின் மாயை. கேதார்நாத்தில் உள்ள ‘மவுனி’ பாபாவிடமிருந்து ‘பயப்படாதே’ என்பதன் இரகசியத்தையும், அவருடைய பல வருட தவம் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அதில் அவர் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
அதில் ‘மவுனி’ பாபாவுடனான சந்திப்பு பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மவுனி பாபா என்பவர்கள் சிவனை நினைத்து தவம் புரிந்து வருபவர்கள். பொதுவாக சிவனடியார்கள் தங்களின் உடலை வருத்தி பல ஆண்டுகள் தவம் புரிவது வழக்கம். அந்த வகையில் மவுனி பாபா கடந்த 11 ஆண்டுகளாக யாரிடமும் பேசாமல் தவம் புரிந்து வருகிறார். இவரிடம்தான் ராகுல் காந்தி ஆசி பெற்றுள்ளார்.
மவுனி பாபா தரப்பில் சுடச்சுட சப்பாத்தி தயாரித்து பிரசாதமாக ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. அதனை ராகுல் காந்தி சாப்பிட்டார்.