திருகோணமலை மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான பற்றாக்குறை உட்பட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் இரண்டு வருடங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உட்பட அரசாங்க மருத்துவமனைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் இம்ரான் மஹ்றூப் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே, சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “விசேட மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதால், நாட்டின் பல பகுதிகளிலுள்ள மருத்துமனைகளில் மருத்துவர்களுக்கான குறைபாடு காணப்படுகிறது.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை உட்பட அனைத்துக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். மருத்துவர் வெற்றிடங்கள் உட்பட சுகாதாரத்துறை வெற்றிடங்களை உடனடியாக முழுமையாக நிரப்புவதற்கு முடியாவிட்டாலும், இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி முடிந்தளவில் அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிற்சிக்கு பின்னரான மருத்துவர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் போது, திருகோணமலை கந்தளாய் மருத்துமனை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இம்ரான் மஹ்றூப் எம்.பி. தனது கேள்வியின் போது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் நிலவும் மருத்துவர் வெற்றிடங்கள் மற்றும் ஏனைய குறைபாடுகள் தொடர்பாக தெரிவித்ததுடன், மருத்துவமனையில் நிலவும் ஏனைய வெற்றிடங்களை நிரப்புவதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்